ஓசூரில் வெட்டப்பட்ட வக்கீல் கவலைக்கிடம்
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், ரங்கசாமிபிள்ளை தெருவைச் சேர்ந்த வக்கீல் கண்ணன், 30, நேற்று முன்தினம், ஓசூர், நாமல்பேட்டையைச் சேர்ந்த வக்கீல் குமாஸ்தா ஆனந்தகுமார், 39, என்பவரால், நீதிமன்ற வளாக நுழைவாயிலில் சரமாரியாக வெட்டப்பட்டார். இது தொடர்பாக அவரையும், அவர் மனைவியான வக்கீல் சத்தியவதி, 33, என்பவரையும், ஓசூர் டவுன் போலீசார் கைது செய்துள்ளனர்.மனைவி சத்தியவதிக்கு, கண்ணன் தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததால், அவரை வெட்டியதாக, ஆனந்தகுமார் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கண்ணனின் உடலில் 11 இடங்களில் வெட்டுக் காயங்கள் உள்ளன. ஓசூரில் தனியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலை வரை, 10 மணி நேரத்துக்கும் மேலாக, ஐந்து ஆப்பரேஷன்கள் அவருக்கு செய்யப்பட்டன. ஆனாலும் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.நேற்று காலை அவர் கண் விழித்ததாகவும், குடும்பத்தினரை சந்திக்க வைத்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. தேவைப்பட்டால், அவருக்கு மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.