கே.ஆர்.பி., அணையிலிருந்து முதல் போகத்துக்கு 120 நாள் தண்ணீர் திறக்க அரசுக்கு கோரிக்கை
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு, 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க, தண்ணீர் திறப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில், அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து ஆண்டுக்கு, 2 முறை பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது வழக்கம். முதல்போக பாசனத்திற்கு ஜூலை மாதத்திலும், 2ம் போகத்திற்கு டிசம்பர் மாதத்திலும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்தாண்டு முதல்போக சாகுபடிக்கு தேவையான அளவு, தண்ணீர் இருப்பு உள்ளதாலும், அவ்வப்போது மழை பெய்து வருவதாலும், முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கே.ஆர்.பி., அணையிலுள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. உதவி செயற்பொறியாளர் அறிவொளி தலைமை வகித்தார்.கூட்டத்தில், டெல்டா பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறுவை தொகுப்பை, இப்பகுதி விவசாயிகளுக்கும் வழங்க, அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். கே.ஆர்.பி., அணை இடது மற்றும் வலதுபுற கால்வாய்களை தண்ணீர் திறப்புக்கு முன்பே, துார்வார, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கே.ஆர்.பி., அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு வரும் ஜூலை, 16 முதல், 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அரசை கேட்டுக் கொள்வது. வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் மூலம், 9,012 ஏக்கரில் பாசன வசதி பெறும் புஞ்சை நிலங்களை, நஞ்சை நிலமாக மாற்றித்தர கேட்டுக் கொள்வது. தண்ணீர் பற்றாக்குறை இருப்பின், அவற்றை தற்போது அணைக்கு வரும் நீர்வரத்து மற்றும் எதிர்வரும் மழை நீரை கொண்டு சரி செய்யலாம். தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால், விவசாயிகளே பொறுப்பேற்று கொள்வது, என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில், உதவி பொறியாளர் பொன்னிவளவன், பையூர் ஆராய்ச்சி நிலைய வல்லுனர்கள், வேளாண் துறை, நீர்வளத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.