உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கடப்பாறை ஆற்றின் குறுக்கே தடுப்பணை 50 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறுமா?

கடப்பாறை ஆற்றின் குறுக்கே தடுப்பணை 50 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறுமா?

ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, சிங்காரப்பேட்டை பஞ்., புளியானுார் கிராமம் அருகே ஜவ்வாது மலை அடிவாரத்தில், தடுப்பணை அணை கட்ட, 50 ஆண்டுகளாக விடுக்கும் கோரிக்கை நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பில், விவசாயிகள் உள்ளனர்.இயற்கை அழகு கொஞ்சும் ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் கடப்பாறை ஆறு உள்ளது. ஆறு முழுவதுமே பாறைகளால் உருவாகி உள்ளது. இந்த ஆறு, ஜவ்வாது மலை மேல் உள்ள பல மலைகளில் இருந்து வரும் தண்ணீர், இந்த கடப்பாறை ஆற்றின் வழியாக, சிங்காரப்பேட்டை பஞ்., உள்ள தீர்த்திரிவலசை பெரிய ஏரியில் நிரம்புகிறது. பின், அதிலிருந்து வெளியேறும் உபரி நீர், தென்பெண்ணை ஆற்றின் வழியாக, சாத்தனுார் அணைக்கு சென்று, வீணாக கடலில் கலக்கிறது. எனவே, கடப்பாறை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி நீர் சேமிப்பதால், 5,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் கூறுகின்றனர். இதற்காக, 50 ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், சென்னம்மாள் கோவில் ஏரி, நார்சாம்பட்டி ஏரி, பிள்ளையார் கோவில் ஏரி, நாய்கனுார் ஏரி போன்ற ஏரிகள் நிரம்புவதன் மூலம், நிரந்தரமாக தண்ணீரை சேமிக்க முடியும். சிங்காரப்பேட்டை, அத்திபாடி, வெள்ளகுட்டை, நாய்க்கனுார், நடுபட்டி, பாவக்கல், மூன்றம்பட்டி ஆகிய பஞ்.,களில், 200க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில், தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாகும்.தடுப்பணை கட்டி கடப்பாறை ஆறு பகுதியில், மிகப்பெரிய சுற்றுலா தலம் அமைந்தால், அதன் மூலம் பஞ்.,க்கு கூடுதல் வருவாய் ஈட்டலாம். 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் நிலை உள்ளது. திருப்பத்துார், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய, 3 மாவட்டத்தின் அருகே, இந்த மலை அமைந்துள்ளது. இங்கு தடுப்பணை கட்டுவது சம்பந்தமாக, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்திடம், மக்கள் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி எம்.பி., செல்லக்குமார் கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன்பு, அப்பகுதியை பார்வையிட்டு அணை கட்ட உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால் இதுவரை, எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க., - அ.தி.மு.க., மாறி மாறி ஆட்சியில் அமர்ந்தாலும், எக்கட்சியும் இதை கண்டு கொள்ளவில்லை. தற்போது வெற்றி பெற்று வரும் எம்.பி.,யாவது இதை நிறைவேற்றுவாரா என்ற ஏக்கத்தில், விவசாயிகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி