| ADDED : மே 27, 2024 06:24 AM
மதுரை : கருத்தரித்தல் மையம் பெருக்கத்துக்கான காரணம் குறித்து மதுரையில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் டாக்டர் சுமதி விளக்கமளித்தார்.சுற்றுச்சூழல் தொண்டு மையம் சார்பில் மனித உடற்கூறுகள், உள்ளுறுப்புகள் சம்பந்தமான நோய் பற்றிய கலந்துரையாடல் நடந்தது.மையத் தலைவர் பதி தலைமை வகித்தார். செயலாளர் கணேசன் வரவேற்றார்.டாக்டர் சுமதி பேசியதாவது: இயற்கைக்கு மாறாக எதை செய்தாலும் எதிர்மறையாகத் தான் இருக்கும். பொருளாதார சூழ்நிலையை காரணம் காட்டி இளம் தலைமுறையினர் திருமணத்தையும், குழந்தை பெறுவதையும் தள்ளிப் போடுகின்றனர். ஒரு பெண் பூப்பெய்தும் காலம் முதல் 45 வயது வரை குழந்தை பெறும் காலமாகும். வயதாகும் போது கருமுட்டையின் வீரியம் குறைந்துகொண்டே வருவதால் 40 வயதுக்கு மேல் குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கிறது. அதனால் 30 வயதுக்குள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது, மன அழுத்தம், குழந்தை பெறுவதை தள்ளிப்போடுவதால் குழந்தை பாக்கியம் இல்லாமல் போகிறது. இதனால், முன்பு குடும்பக் கட்டுப்பாடு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிலையில் இன்று கருத்தரித்தல் மையம் பெருகி வருகிறது. சர்க்கரை நோயுள்ளவர்கள் முறையான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். இரவு உணவுக்கும் துாக்கத்துக்கும் 3 மணி நேரம் இடைவெளி இருப்பது அவசியம் என்றார்.மைய ஒருங்கிணைப்பாளர் சந்திரகாந்தன் நன்றி கூறினார். பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.