| ADDED : நவ 24, 2025 06:12 AM
மதுரை: மதுரையில் நேற்றுமுன்தினம் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, 15 ஆண்டுகளுக்கு பின் டி.வி.எஸ்., நகரில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி வீட்டிற்கு சென்று குடும்பத்தினரிடம் நலம் விசாரித்து 40 நிமிடங்கள் வரை பேசினார். தி.மு.க.,வில் கருணாநிதி தலைவராக இருந்தபோது அழகிரி - ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு இடையே 'நீயா நானா' போட்டி இருந்தது. தென் மாவட்டங்களில் திருமங்கலம் உட்பட 6 சட்டசபை இடைத்தேர்தல்களில் அழகிரியின் வியூகத்தால் தி.மு.க., வெற்றி பெற்றது. இதனால் அவருக்கு தென் மாவட்ட அமைப்புச் செயலாளர் பதவியை கருணாநிதி வழங்கினார். அழகிரி பிறந்த நாளையொட்டி மதுரையில் 2014ல் 'கிங் ஆப் தமிழ்நாடு' என்ற அடைமொழியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. 'இனி ஒரு விதி செய்வோம்... ஜன.30ல் (அழகிரி பிறந்தநாள்) தி.மு.க., பொதுக்குழு கூட்டம்' போன்ற போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து அழகிரி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஒருகட்டத்தில் புதிய கட்சி துவங்க அழகிரி நினைத்து பின்னர் அந்த முடிவை கைவிட்டார். தற்போது வரை அழகிரி, அவரது ஆதரவாளர்கள் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. 15 ஆண்டுகளுக்கு பின் துர்கா முதல்வரான பின் பலமுறை மதுரைக்கு ஸ்டாலின் வந்திருந்தாலும், இந்தாண்டு ஜூனில் அழகிரியின் வீட்டிற்கு சென்று சந்தித்தார். குடும்பத்தினர் நலம் குறித்தே பேசியதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்டாலின் வீட்டுப் பணியாளரின் சகோதரி திருமண விழாவில் பங்கேற்க நேற்றுமுன்தினம் மதுரை வந்த துர்கா, மாலை 6:00 மணிக்கு மேல் அழகிரி வீட்டிற்கு சென்றார். அவருடன் அவரது தங்கையும் சென்றார். அவரை தி.மு.க., நகர் செயலாளர் தளபதியின் மகன் துரை கோபால்சாமி அழைத்துச் சென்றார். அழகிரி, மனைவி காந்தியிடம் மகன் தயாநிதியின் உடல்நலம் மற்றும் குடும்பத்தினர் குறித்து நலம் விசாரித்த துர்கா, 40 நிமிடங்கள் வரை பேசினார். பின்னர் மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசித்துவிட்டு சென்னை திரும்பினார். இதற்கு முன் தயாநிதி திருமணத்திற்காக 2010ல் அழகிரி வீட்டிற்கு துர்கா வந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அரசியலில் அழகிரி தி.மு.க.,வினர் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்றி துர்கா சென்றிருக்க முடியாது. அவரது சந்திப்பில் குடும்ப உறவுகள் குறித்து பரஸ்பர நலம் விசாரிப்புடன் மதுரை குறித்த அரசியல் பேசியதற்கும் வாய்ப்பு அதிகம். குறிப்பாக மதுரை தி.மு.க.,வில் தற்போது உச்சகட்ட குழப்பம் நீடிக்கிறது. மாநகராட்சியில் மேயரை கூட தி.மு.க., தலைமை நியமிக்க முடியாமல் திணறுகிறது. அமைச்சர் மூர்த்தி மட்டும் செயல்படுகிறார். இதனால் 10 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெறுவது கடினம் என உளவுத்துறையும், ஆளுங்கட்சியின் 'பென்' டீமும் 'ரிப்போர்ட்' தாக்கல் செய்துள்ளது. இதனால் மதுரையை ஒருங்கிணைக்க அழகிரியை மீண்டும் களத்தில் இறக்க ஆலோசித்திருக்கலாம். அழகிரி - துர்கா சந்திப்பால் தி.மு.க.,வில் ஒரு தரப்பு கலக்கத்திலும், ஒரு தரப்பு சந்தோஷத்திலும் உள்ளனர் என்றனர்.