| ADDED : நவ 19, 2025 05:36 AM
மதுரை: மத்திய அரசால் அறிமுகப்படுத்தியுள்ள மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை திரும்பப் பெற வேண்டும் என தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுகுறித்து சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது: பசுமை புரட்சிக்கு முன் இந்தியாவில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பாரம்பரிய அரிசி ரகங்கள் இருந்ததாக, மூத்த இயற்கை வேளாண் விஞ்ஞானி ரிட்ச்சாரியா தெரிவிக்கிறார். இயற்கை நெல் ரகங்கள் தற்போதும் ஆயிரக்கணக்கில் இருக்கும் போது அவற்றிற்கு முக்கியத்துவம் தராமல் மத்திய அரசு வீரிய ரகங்களை அறிமுகப்படுத்தி பாரம்பரிய ரகங்களை புறக்கணிக்கிறது. மரபணு மாற்றப்பட்ட, திருத்தப்பட்ட ரகங்கள் பாரம்பரிய நாட்டு ரகங்களை ஒழித்து வருகிறது. பாரம்பரிய, நாட்டுரக விதைகள் தான் இந்திய விவசாயிகளின் பேராயுதம். சிறு தானிய ஆண்டு, இயற்கை விவசாயம் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ள மத்திய அரசு, இயற்கை வேளாண்மையை பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மரபணு மாற்று தொழில்நுட்பம் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு பல கட்ட சோதனைகளை செய்ய வேண்டும் என இந்திய சுற்றுச்சூழல் சட்டம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 'மரபணு மாற்றப்பட்ட' என்கிற வார்த்தையை தவிர்த்து 'திருத்தப்பட்ட' என்று சொல்லி, எந்தவித சோதனையும் நடத்தாமல், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் திருத்தப்பட்ட நெல் ரகத்தை அறிமுகப்படுத்தி, மக்களின் உடல் நலனுக்கு எதிரான தாக்குதலை நடத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த செயலால் இதுவரை கிலோ ரூ. 45க்கு விதை நெல்லை வாங்கும் இந்திய விவசாயிகள், இனி கிலோ ரூ.1500 கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். மரபணு மாற்றப்பட்ட பருத்தியால் பூச்சி தாக்குதலும் குறையவில்லை, உற்பத்தியும் அதிகரிக்கவில்லை. மாறாக உரம், தண்ணீரின் தேவை தான் அதிகரித்துள்ளது. மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளின் விலை 200 மடங்கு உயர்ந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மரபணு மாற்றப்பட்ட நெல் ரகத்தை பயிரிடும் விவசாயிகளுக்கும் இதே நிலை ஏற்படலாம். மையம் தனியாக தேவை நெல் கொள்முதல் மையங்கள் அமைத்து வீரிய ரக நெல்லை கொள்முதல் செய்யும் மத்திய அரசு, பாரம்பரிய நெல் ரகங்களை கொள்முதல் செய்வதில்லை. எனவே பாரம்பரிய நெல் ரகங்களை அறுவடை செய்யும் இயற்கை விவசாயிகளுக்காக கொள்முதல் மையம் தனியாக அமைக்க வேண்டும். தமிழகம் வரும் பிரதமர் மோடி, மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை மத்திய அரசு திரும்பப்பெறும் என்று அறிவிக்க வேண்டும் என இயற்கை விவசாயிகள் எதிர்பார்க்கிறோம் என்றார்.