மதுரை:மதுரை மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கு, 900 ஓட்டுச்சாவடிகள்
அமைக்க முடிவு செய்யப்பட்டது. உள்ளாட்சி தேர்தல்கள் அக்டோபரில் நடக்கின்றன.
இதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்த, உள்ளாட்சி அமைப்புகளுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆண், பெண் வாக்காளர்களை சரிபார்க்கும்
பணி தொடங்கியுள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட பின் மதுரை மாநகராட்சி, முதல்
உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதால், பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
ஓட்டுச்சாவடிகள் குறித்த ஆலோசனை முடிந்து, 100 வார்டுகளுக்கு 900
ஓட்டுச்சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. வாக்காளர் பட்டியலில் யாரும்
விடுபடாத வகையில், பணிகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. விடுபடுவதை
தவிர்க்கும் விதமாக, முன்கூட்டியே 'பூத் சிலிப்' வழங்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியில் புதிதாக இணையும், ஆனையூர், அவனியாபுரம்,
திருப்பரங்குன்றம் நகராட்சிகள், ஹார்விபட்டி, திருநகர், விளாங்குடி
பேரூராட்சிகள், மேலமடை, உத்தங்குடி, வண்டியூர், கண்ணனேந்தல், நாகனாகுளம்,
திருப்பாலை, சின்ன அனுப்பானடி, சிந்தாமணி, ஐராவதநல்லூர், புதுக்குளம்(பிட்
2), தியாகராஜர் காலனி ஊராட்சிகளில் ஓட்டுச்சாவடி அமைக்கும் இடங்கள்
குறித்தும் ஆய்வு நடந்து வருகிறது.