| ADDED : ஆக 11, 2011 03:43 AM
மேலூர் : பேத்தி முறை உள்ள மன நலம் பாதித்த பெண்ணை கற்பழித்து, கர்ப்பமாக்கிய 67 வயது முதியவரை மேலூர் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். மதுரை மாவட்டம் மேலளவு அருகில் உள்ளது ஆலம்பட்டி. இவ்வூரில் கொட்டகை வேலை பார்த்து வரும் பெரியகருப்பன் மகள் ராக்கு,23 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ராக்கு சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரது வீட்டின் அருகில் ராக்குவிற்கு தாத்தா முறையில் உள்ள பாண்டி,67 மனைவியுடன் குடியிருந்து வருகிறார். பாண்டி அரசு போக்குவரத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. பாண்டியின் பேத்திகளுடன் விளையாடுவதற்காக ராக்கு அடிக்கடி அவர் வீட்டிற்கு செல்வார். இதனை பயன்படுத்திய பாண்டி அவரை கற்பழித்துள்ளார். நடந்ததை உணராமல் இருந்த ராக்கு கர்ப்பமானார். அவரது பெற்றோர் மேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் எட்டு மாத கர்ப்பிணியான அவரை அனுமதிக்க, குழந்தை இறந்து பிறந்தது. இத்தகவல் மாவட்ட எஸ்.பி.,யின் கவனத்திற்கு செல்ல, அவரது உத்தரவின் பேரில் போலீசார் பாண்டியை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.