இயக்குனர் வெற்றிமாறன் மீது போக்சோ வழக்குப்பதிய புகார்
மதுரை : பள்ளி மாணவியரை தவறாக சித்தரித்துள்ள 'பேட் கேர்ள்' படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் வெற்றிமாறன் மீது உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்மண்டல ஐ.ஜி., அலுவலகத்தில் மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: இப்படத்தின் டீசர் யுடியூப்பில் உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான ஆபாச படங்கள், குற்றங்கள் உள்ளிட்ட சட்ட மீறல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பள்ளி மாணவ, மாணவியர் பாலியல் முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இது குழந்தைகளை பாதுகாக்கும் சட்டங்களை மீறுவதாக உள்ளது. படத்தை தயாரித்த இயக்குனர் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் மீது ஏற்கனவே மதுரை போலீசில் புகார் அளித்தேன். திருப்பாலை, தல்லாகுளம் மகளிர் போலீசார் விசாரித்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை. இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பெற்றேன். இதன்அடிப்படையில் அவர் உட்பட சம்பந்தப்பட்டோர் மீது 'போக்சோ' சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தென்மண்டல ஐ.ஜி., அலுவலகத்தில் முறையிட்டுள்ளேன். இவ்வாறு கூறினார்.