உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வெள்ளம் வருமுன் நடவடிக்கை எடுங்க பந்தல்குடி பகுதி மக்கள் கோரிக்கை முதல்வர் சொன்னது என்னாச்சு

வெள்ளம் வருமுன் நடவடிக்கை எடுங்க பந்தல்குடி பகுதி மக்கள் கோரிக்கை முதல்வர் சொன்னது என்னாச்சு

மதுரை: கடந்தாண்டைப் போல பெருமழையால் செல்லுார் பந்தல்குடி கால்வாய் நிறைந்து குடியிருப்புகளைச் சூழ்வதற்கு முன்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் மா.கம்யூ., நிர்வாகிகள் தலைமையில் நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ரமேஷிடம் மனு கொடுத்தனர். மனு குறித்து கட்சி உறுப்பினர்கள் பாலு, விஜயராஜன், நரசிம்மன், முத்து, வேலுத்தேவா, குமரவேல், கோட்டைசாமி கூறியதாவது: மழைக்காலத்தில் வெள்ளநீரை வெளியேற்றவும் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாதவாறு மதுரையில் 11 கால்வாய்கள், அதைச்சார்ந்து பலநுாறு கண்மாய்கள் அமைக்கப்பட்டிருந்தன. பந்தல்குடி உள்ளிட்ட அனைத்து கால்வாய்களும் கண்மாய்களும் பராமரிக்கப்படவில்லை. இதனால் பெருமழை பெய்யும் போது செல்லுார், ஆலங்குளம் பகுதி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்கிறது. கண்மாய்கள் துார்வாராமல் மேடிட்டதால் வெள்ளநீரை தேக்கி வைக்கவும் முடியவில்லை. கடந்தாண்டு செல்லுார் பந்தல்குடி கால்வாய் நிறைந்து வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்தது. கடந்த மே 31ல் இக்கால்வாயை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், துார்வாரி சுற்றுச்சுவர் எழுப்பப்படும் என்று கூறினார். கால்வாயை துார்வார ரூ.23 கோடி, இரு கரைகளின் தலா 2.6 கி.மீ., நீளத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்ப ரூ.63 கோடி மதிப்பிடப்பட்டு முன்மொழிவு அனுப்பியதாக கலெக்டர் தெரிவித்திருந்தார். 5 மாதங்களுக்கு மேலாகியும் எந்த பணியும் தொடங்கவில்லை. இந்தாண்டில் கூடுதல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மழை அதிகமாக பெய்தால் செல்லுார், மீனாம்பாள்புரம் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை