ப.வேலூர்: சொத்து பிரித்து தருவதில் ஏற்பட்ட தகராறில், தந்தையை தாக்கிய மகள்கள், மருமகன்கள் உள்ளிட்ட ஆறு பேர் மீது, ப.வேலூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். ப.வேலூர் அடுத்த படமுடிபாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி(60). அவரது மனைவி சின்னம்மாள் (60). தம்பதியருக்கு பூங்கொடி, மலர்கொடி, சங்கீதா ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி தங்களது கணவருடன் வசித்து வருகின்றனர். கந்தசாமிக்கும், அவரது மகள்களுக்கும் இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பூங்கொடி, மலர்கொடி, சங்கீதா ஆகியோர், தங்களது கணவர்களுடன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு, கந்தசாமியிடம் சொத்தை பிரித்து தரும்படி கேட்டுள்ளனர். அப்போது கந்தசாமிக்கும், மகள்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த மகள்கள் மூன்று பேரும், தங்களது கணவர்களுடன் சேர்ந்துகொண்டு கந்தசாமியை தாக்கியுள்ளனர். மேலும், வீட்டில் இருந்த பொருட்களை அடித்து சூறையாடினர். தாக்குதலில் படுகாயமடைந்த கந்தசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து, ப.வேலூர் போலீஸார், கந்தசாமியின் மகள்கள் மற்றும் மருமகன்கள் என, ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சொத்துக்காக, பெற்ற மகள்களே தந்தையை தாக்கிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.