நாமக்கல், தவறான நடைமுறையில், விவசாய நிலத்தை ஏலம் விட முயற்சிக்கும் வழக்கில், வங்கி மேலாளர் ஆஜராகி பதிலளிக்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் வசிப்பவர் வெங்கடாசலம், 57. இவர், நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், எங்கள் குடும்பத்தினர் கிடாரம் கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமான, 12 ஏக்கர் நிலத்தின் அசல் ஆவணங்களை, 2020 அக்., மாதத்தில் அடமானம் வைத்து, நாமக்கல் கத்தோலிக் சிரியன் வங்கியில், 50 லட்சம் ரூபாய் கடன் பெற்றோம். கடன் விண்ணப்பத்திலும், வங்கியின் சரிபார்ப்பு அறிக்கையிலும் விவசாய கடன் என குறிப்பிடப்பட்டுள்ளது. விளைச்சல் சரியாக இல்லாததால், வங்கியில் ஒப்புக்கொண்டபடி தவணைத் தொகைகளை செலுத்த இயலவில்லை. இந்நிலையில், வங்கி நிர்வாகம் சர்பாசி சட்டப்படி எங்களது நிலத்தை சுவாதீனம் எடுத்து, ஏலம் விட உள்ளதாக கடந்த மே மாதம் நோட்டீஸ் அனுப்பியது.அதிர்ச்சியடைந்து வங்கிக்கு சென்று, சர்பாசி சட்டத்தில் விவசாய நிலங்களை ஏலம் விட முடியாது என கூறியபோது, வங்கி தரப்பில் சரிவர பதிலளிக்கவில்லை. மேலும், விவசாய கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட நிலங்களை, விவசாயம் அல்லாத கடன் பெறப்பட்டது என, மோசடியாக ஆவணங்களை உருவாக்கி சொத்தை கைப்பற்றி ஏலத்துக்கு விட வங்கி முயற்சிப்பதை தடுக்க வேண்டும். வங்கியின் தவறான நடவடிக்கையால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு மனுதாக்கல் செய்யப்பட்டது.வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி ராமராஜ், 'கடன் வழங்கிய வங்கியின் கிளை மேலாளரும், உயர் அலுவலர்களும் ஆக., 30 அன்று நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.