நாமக்கல் : நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவின்படி, யுரேகா போர்ப்ஸ் நிறுவனம், வாடிக்கையாளருக்கு இழப்பீடாக 76,280 ரூபாய்க்கான 'டிடி' வழங்கியது.நாமக்கல், பரணி நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் மனைவி உதயபிரியா, 56. இவர், வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும், 'யுரேகா போர்ப்ஸ்' நிறுவனத்தில், 2019 அக்டோபரில் அவரது வீட்டிற்கு, 'சிசிடிவி' கேமரா பொருத்துவதற்கு, 65 ஆயிரம் ரூபாய் செலுத்தினார். பணத்தை பெற்றுக் கொண்ட நிறுவனம், உதயபிரியாவிற்கு கட்டணம் இல்லாமல், 'ஹாலிடே ரிசார்ட்ஸில்' மூன்று நாட்கள் குடும்பத்துடன் தங்க வவுச்சர் வழங்கியது.இதற்கிடையே, வாடிக்கையாளர் வீட்டுக்கு, 'சிசிடிவி' கேமராவை உரிய காலத்தில் நிறுவனம் பொருத்தி தராமல் இருந்தது. இறுதியில், 2022ல், கேமராவை பொருத்தினர். கால தாமதமாக பொருத்தியதுடன், ஹாலிடே ரிசார்ட்ஸில் தங்குவதற்கு வழங்கப்பட்ட வவுச்சரும் காலாவதியாகி விட்டது.அதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர், 2023 அக்.,ல், யுரேகா நிறுவனத்தின் மீது, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா நேற்று தீர்ப்பளித்தனர்.வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தவருக்கு இழப்பீடாக, 60,000 ரூபாய், வழக்கு செலவு தொகையை, நான்கு வாரத்திற்குள் வழங்க கடந்த ஜனவரியில் உத்தரவிட்டனர். ஆனால், இழப்பீட்டு தொகையை வழங்க தவறியதால், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவன கிளை மேலாளர் உள்ளிட்ட அலுவலர்களை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என, உதயபிரியா மனு தாக்கல் செய்தார்.இந்நிலையில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், நேற்று ஆஜரான 'யுரேகா போர்ப்ஸ்' வீட்டு உபயோக விற்பனை நிறுவன கிளை மேலாளர், நீதிமன்ற உத்தரவுபடி இழப்பீட்டுத் தொகையும், செலவு தொகையும், காலதாமதத்திற்கான வட்டியும் சேர்த்து, 76,280 ரூபாய்க்கான டி.டி.,யை சமர்ப்பித்தார்.அவற்றை, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி ராமராஜ், வாடிக்கையாளர் உதயபிரியாவிடம் வழங்கினார்.