நாமக்கல், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து, மொத்தம், 406 மனுக்கள் வரப்பெற்றன.அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர் பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவிட்டார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஒருவருக்கு, 9,050 ரூபாய் மதிப்பில், மூன்று சக்கர சைக்கிள், ஒருவருக்கு, 11,500 ரூபாய் மதிப்பில், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.