ராசிபுரத்தில் பக்தர்கள் மீது மாடு தாண்டும் திருவிழா
ராசிபுரம், ராசிபுரம், பொன் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று மாடு தாண்டும் திருவிழா நடந்தது. ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. புரட்டாசி, 3வது சனிக்கிழமையை முன்னிட்டு, மாடு தாண்டும் விழா நேற்று நடந்தது. பொன் வரதராஜ பெருமாளை குலதெய்வமாக கொண்ட குடும்பத்தினர், சேலம் சின்ன திருப்பதியில் அதிகளவு வசிக்கின்றனர். இவர்கள்தான் இந்நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர். நேற்று விரதத்துடன் மாட்டை அழைத்து, ராசிபுரம் எல்லை பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்தனர். அங்கிருந்து சக்தி அழைத்து நகரின் முக்கிய வீதிகளில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று மதியம் பெருமாள் கோவிலுக்கு வந்தனர். கோவில் ராஜகோபுரத்திற்கு நேராக உள்ள தெருவில் மாடு வரும்போது ஆண், பெண், குழந்தைகள் கீழே படுத்துக் கொண்டனர். மாடு பக்தர்களை மிதிக்காமல் அவர்களை தாண்டி நடந்து சென்றது. படுத்திருந்த பக்தர்களை மாடு தாண்டி செல்லும்போது, அதன் கால்கள் பக்தர்கள் மேல் படாமல் சென்றால் நினைத்தது நடக்கும் என்பதாகவும், கால் பட்டுவிட்டாலோ அல்லது தாண்டாமல் சென்று விட்டாலோ பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறாது என்பது நம்பிக்கை. நிகழ்ச்சியில், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்து விரதத்தை முடித்தனர்.