உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இளம் தலைமுறையை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை: கலெக்டர் உமா

இளம் தலைமுறையை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை: கலெக்டர் உமா

நாமக்கல், ''போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்; வளரும் இளம் தலைமுறையினரை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை,'' என, விழிப்புணர்வு நிகழ்ச்சியில், நாமக்கல் கலெக்டர் உமா பேசினார்.நாமக்கல் மாவட்ட இயக்க மேலாண் அலகு சார்பில், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு, மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம், நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது:பெண்களிடம் ஒரு திட்டத்தை எடுத்துரைத்தால், அவர்களால் வீடு, கிராமம், வட்டம், மாவட்டம் முழுவதும் கொண்டு சேர்க்க முடியும். அத்தகைய திறன் படைத்தவர்கள் பெண்கள். போதைப் பொருள் தடுப்பு பணியில் பெண்களால் முழு ஈடுபாட்டோடு செயல்பட முடியும். இத்தகைய தீய செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட்டு இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்.இது ஒரு தனிநபர் மட்டுமின்றி, ஒரு சமுதாய சீர்கேடாக மாறுகிறது. சங்கிலி தொடர் போல பல்வேறு நிலைகளில் சமுதாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க வேண்டியது நம் கடமை. நாமக்கல் மாவட்டத்தை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். வளரும் இளம் தலைமுறையினரை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.இவ்வாறு அவர் பேசினார்.கூடுதல் எஸ்.பி., தனராசு, மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கனகமாணிக்கம், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அருண், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ