உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வார்டன்கள் சற்றும் சம்பந்தம் இல்லாததால் புலம்பல்

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வார்டன்கள் சற்றும் சம்பந்தம் இல்லாததால் புலம்பல்

ராசிபுரம், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், மக்களிடம் இருந்து மனுக்களை பெற, சற்றும் சம்பந்தமே இல்லாத விடுதி வார்டன்களை ஈடுபடுத்துவதால், விடுதி பணிகள் பாதிப்பதாகவும், மக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு சரியாக பதிலளிக்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.தமிழகம் முழுவதும், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, 15ல் தொடங்கி, ஆக., 14 வரை, 20 நாட்கள் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முகாமில், பெரும்பாலும் வருவாய்த்துறை தொடர்பான மனுக்கள் தான் அதிகம் வருகின்றன. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை, பட்டா பெயர் மாற்றம், குடிநீர், மின் இணைப்பு பெயர் மாற்றம், ஆதார் சேவை, ஆதார் திருத்தம், குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கைகள் தான், 90 சதவீதம் பெறப்படுகிறது.ஆனால், முகாமில் அனைத்து துறை அதிகாரிகளும் செல்ல வேண்டியுள்ளது. முக்கியமாக, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், அரசு சமூக நீதி விடுதி வார்டன்கள் தான், முகாம்களுக்கு செல்கின்றனர். இதனால், தங்கள் பணியை கவனிக்க முடியாமல், முகாம்களில் வருவாய்துறை தொடர்பான பணிகளை கவனிக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத கேள்விகளுக்கு, பதில் தேடி கூறவேண்டியுள்ளது. இதற்கு, தமிழ்நாடு அனைத்து துறை காப்பாளர்கள், பணியாளர்கள் நலச்சங்கத்தினர், கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அதில், பிற்படுத்தபட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை என, இரண்டு துறைகளிலும், நாமக்கல் மாவட்டத்தில், 60க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி, மாணவ, மாணவியர் விடுதிகள் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. அங்கு, மாணவர்களுக்கான உணவு, கல்வி ஒழுக்கம், குடிநீர் மற்றும் இதர தேவைகளை கண்காணித்து, குறித்த நேரத்தில் கிடைக்க செய்வதுதான் வார்டன்களின் முக்கிய பணி.ஆனால், அவற்றில் சற்றும் சம்பந்தமில்லாமல், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமிற்கு சென்று, நாள் முழுக்க பொதுமக்களிடம் மனு வாங்கவேண்டியுள்ளது. இதில், மக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு, வார்டன்களால் சரியான பதில் கூற முடியாமல் தவிக்கின்றனர். மேலும், விடுதி பணிகள் பாதிப்பதாக புலம்புகின்றனர். அதனால், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இதை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை