| ADDED : செப் 22, 2011 02:30 AM
மோகனூர்: எஸ்.வாழவந்தி ரேஷன் கடை விற்பனையாளரின் அடாவடியால், கூலி வேலைக்கு
செல்வோர் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.மோகனூர் யூனியன், எஸ்.வாழவந்தியில்
உள்ள ரேஷன் கடையில் மேலப்பட்டி, கே.ராசாம்பாளையம், எஸ்.வாழவந்தியை சேர்ந்த
மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். இங்கு தியாகராஜன்
என்பவர் விற்பனையாளாக பணியாற்றுகிறார். அவர் பணிக்கு வந்ததும், ஒரு
கார்டுக்கு தேவையான பில்லை போட்டு விட்டு அதற்கான பொருட்களை வழங்கிய பின்
மற்ற கார்டுக்கு தேவையான பொருட்களை வழங்கி வருகிறார். அதனால், பல மணி நேரம்
காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. சேர்ந்தாற் போல், கார்டுகளுக்கு
தேவையான பொருட்களுக்கு பில்லை போட்டு, அதற்குரிய பொருட்களை வினியோகம்
செய்தால் விரைவில் கூட்டம் குறைய வாய்ப்பு உள்ளது. ஒவ்வொன்றாக பில்
போடுவதால், காத்திருக்கும் மக்கள் கடும் அதிருப்தி அடைகின்றனர். இது
குறித்து கேட்டால், 'நான் மெதுவாகத்தான் போடுவேன். இஷ்டம் இருந்தால்
இருந்து வாங்கிச் செல்லுங்கள்; இல்லையென்றால் கூட்டம் குறைவாக இருக்கும்
போது வந்து வாங்கிக்கொள்ளுங்கள்' என, அடாவடியாக பேசுகிறார்.மேலும், அவருக்கு தெரிந்தவர்களின் கார்டுகளை, வேறு ஆட்கள் கொண்டு வந்தால்,
அவர்களுக்கு பொருட்களை வழங்குகிறார். மற்றவர்களுக்கு கார்டுக்குரியவர்களே
வந்தால் மட்டுமே பொருட்கள் வழங்கமுடியும் என, பிடிவாதம் செய்கிறார்.
அதனால், பலரும் கூலி வேலையை விட்டுவிட்டு வந்து பொருட்களை வாங்கி
செல்கின்றனர்.இப்பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலும் கூலி தொழிலாளர்களே.
மேலும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றியும் வருகின்றனர்.
ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக, மாதத்தில் இரண்டு
மூன்று நாட்கள் வேலைக்கு செல்ல முடிவதில்லை.மக்களின் நிலையை கருத்தில்
கொண்டு, ரேஷன் கடை விற்பனையாளரை வேறு கடைக்கு மாற்ற சம்பந்தப்பட்ட துறை
உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.