உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அ.தி.மு.க., வேட்பாளருக்கு எதிராக களம் இறங்கிய போட்டி வேட்பாளர்

அ.தி.மு.க., வேட்பாளருக்கு எதிராக களம் இறங்கிய போட்டி வேட்பாளர்

குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சி சேர்மன் பதவிக்கு, அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக, கட்சியின் தொகுதி இணைச் செயலாளர் போட்டி வேட்பாளராக களம் இறங்கியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.குமாரபாளையம் நகராட்சி சேர்மன் வேட்பாளருக்கு, அ.தி.மு.க., சார்பில், கட்சியின் நகரச் செயலாளர் நாகராஜ், தொகுதி இணைச் செயலாளர் சிவசக்தி தனசேகரன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வந்தது. இருவரும், கட்சியின் மாவட்டச் செயலாளரான அமைச்சர் தங்கமணியிடம், தங்களது செல்வாக்கு மூலம் 'சீட்' பெற தீவிர முயற்சி மேற்கொண்டனர்.இறுதியில், நகரச் செயலாளர் செல்வராஜ், சேர்மன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இது, தொகுதி இணைச் செயலாளர் சிவசக்தி தனசேகரன் தரப்பினரை கடும் அதிர்ச்சியடையச் செய்தது. அதனால், சிவசக்தி தனசேகரன் போட்டி வேட்பாளராக களம் இறங்க முடிவு செய்தார். அதையறிந்த அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர், சிவசக்தி தனசேகரனை சமாதானம் செய்ய முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது.சமாதானத்தை ஏற்காத சிவசக்தி தனசேகரன், நேற்று தனது ஆதரவாளர்களுடன், குமாரபாளையம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று, தேர்தல் அதிகாரி சந்திரசேகரனிடம் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், தனக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.அ.தி.மு.க., அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளராக சிவசக்தி தனசேகரன் மனு தாக்கல் செய்திருப்பது, குமாரபாளையம் அ.தி.மு.க.,வினர் மத்தியில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.* நகராட்சி சேர்மன் பதவிக்கு, அ.தி.மு.க., சார்பில் நாகராஜ், காங்கிரஸ் சார்பில் மோகன் வெங்கட்ராமன், பா.ம.க., சார்பில் பழனிச்சாமி, தே.மு.தி.க., சார்பில் மாதேஸ்வரன், தி.மு.க., சார்பில் குணசேகரன், ம.தி.மு.க, சார்பில் மணி உட்பட, 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.அதேபோல், நகராட்சியில் மொத்தம் உள்ள, 33 கவுன்சிலர் பதவிக்கு, 257 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். அதில், 198 பேர் நேற்று ஒரு நாளில் மட்டும் மனுதாக்கல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்