நாமக்கல் : மாவட்டத்தில், 8 வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடந்த, பொது வினியோகத்திட்ட குறைதீர் நாள் முகாமில், 95 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.நாமக்கல் மாவட்டத்தில், பொது வினியோக திட்டத்தின் மூலம், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், மொபைல் போன் எண் பதிவு மற்றும் பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் சேவைகளை, அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குறைகளை நிவர்த்தி செய்யவும், 'மக்கள் குறைதீர் நாள் முகாம்', ஒவ்வொரு மாதமும், இரண்டாவது சனிக்கிழமை, வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடக்கிறது.அதன்படி, மாவட்டத்தில் உள்ள, நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலுார், குமாரபாளையம் ஆகிய, எட்டு வட்ட வழங்கல் அலுவலகங்களில், அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில், 'மக்கள் குறைதீர் நாள் முகாம்' நேற்று நடந்தது. நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, தாசில்தார் கோவிந்தசாமி தலைமை வகித்தார். ஏராளமானோர் பல்வேறு கோரிக்கை குறித்து மனு அளித்தனர். மாவட்டத்தில், நாமக்கல், கொல்லிமலை, குமாரபாளையம், மோகனுார், ப.வேலுார், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, என, 8 தாலுகாவில் நடந்த குறை தீர் கூட்டத்தில், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், மொபைல் எண் மாற்றம் உள்பட, மொத்தம், 95 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.