தென்னையில் காண்டாமிருக வண்டு; பாதிப்பை கட்டுப்படுத்த அறிவுரை
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில், தென்னை மரத்தில் அதிகளவு காண்டாமிருக வண்டு தாக்குதல் காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த, வேளாண் உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி யோசனை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:காண்டாமிருக வண்டு தாக்குதல் அடைந்த தென்னையில் தென்படும் அறிகுறிகள், முழு வளர்ச்சியடைந்த வண்டுகள் குருத்து இலைகளில் துளையிட்டு தாக்குவதால் குருத்து விரியும்போது முக்கோண வடிவிலான வெட்டுகள் இலைகளில் காணப்படும். வண்டுகள் மென்று எஞ்சிய மரச்சக்கைகள், அடிமட்டைகளின் இடையில் காணப்படும். இளந்தென்னைகளில் குருத்து பாகங்களை துளையிட்டு தாக்குவதால் குருத்திலைகள் வளர்ச்சி குன்றி, வளைந்தொடிந்தும் மடிந்தும் விடுகின்றன. விரியாத பூக்குலைகளையும், இவ்வண்டுகள் தாக்குவதால் பாளைகள் அழுகி காய்ந்து விடும். இதை உடனடியாக கட்டுப்படுத்துவது அவசியம். தென்னையில் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கு ஒரு பங்கு மற்றும் மணல் இரு பங்கு கலந்து குருத்து பகுதியில் இட வேண்டும். வண்டுகள் மென்று மரச்சக்கைகள் வெளியேறிய துவாரங்களில் கம்பி அல்லது சுளுக்கியால் வண்டுகளை குத்தி வெளியில் எடுத்துக் கொன்று விட வேண்டும். நாப்தலின் உருண்டைகள் வைப்பதும் வண்டுகளை விரட்டி அடிக்க உதவும். மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி, காண்டாமிருக வண்டு தாக்குதலில் இருந்து தென்னையை காப்பாற்றலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.