ப.வேலுார்: -- 'சிப்ஸ்' மரவள்ளி கிழங்கு டன்னுக்கு, 2,000 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் சுற்றுவட்டார பகுதிகளில் மரவள்ளி கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி சென்று, புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்புகின்றனர். மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், 'சிப்ஸ்' தயார் செய்யவும் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.ஜவ்வரிசி தயாரிக்க பயன்படும் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள், அதிலுள்ள மாவுச்சத்து, புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். தற்போது, 'சிப்ஸ்' தயாரிக்க பயன்படும் மரவள்ளி கிழங்கு மட்டுமே அறுவடை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம், 'சிப்ஸ்' மரவள்ளி கிழங்கு டன், 12,000 ரூபாய்க்கு விற்றது, தற்போது, 2,000 ரூபாய் விலை உயர்ந்து, 14,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வரத்து குறைந்துள்ளதால், விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.