உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அதிர்ச்சி தகவல்..! 57 பள்ளி மாணவர்களுக்கு இருதய குறைபாடு; தேசிய சுகாதார பரிசோதனையில் கண்டுபிடிப்பு

அதிர்ச்சி தகவல்..! 57 பள்ளி மாணவர்களுக்கு இருதய குறைபாடு; தேசிய சுகாதார பரிசோதனையில் கண்டுபிடிப்பு

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் சிறுவர்களில், 57 பேருக்கு இருதய பாதிப்பு கண்டறியப்பட்டு, உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.கடந்த, 2015ம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய சிறுவர் சுகாதார இயக்க (ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்தியா காரியக்ராம்) திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உரிய மருத்துவ பரிசோதனைகள், தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

30 நோய்கள்

ஒவ்வொரு பள்ளியிலும் படிக்கும் குழந்தைகளை மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர், உதவியாளர் கொண்ட மருத்துவ குழு நடமாடும் மருத்துவ வாகனத்தின் வாயிலாக, பள்ளிக்கு வந்து இப்பரிசோதனையை நடத்தி வருகிறது.இப்பரிசோதனையில் பள்ளி குழந்தைகளிடையே உள்ள குறைபாடு, சத்து குறைபாடு, உடலில் உள்ள நோய்கள், வளர்ச்சியின் போது ஏற்படும் மாறுபாடுகள் உள்ளிட்ட, 30 நோய்கள் குறித்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதில், குறைபாடு என்பது பள்ளி குழந்தைகளின் தண்டுவடம், இருதயம், கண் உள்ளிட்டவைகளில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து, உரிய சிகிச்சை அளித்து, அதை போக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இரண்டாவதாக உடலில் உள்ள சத்து குறைபாடு, அதனால் ஏற்படும் தோல் வியாதிகள், தைராய்டு பிரச்னை, பூஞ்சை பிரச்னை உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றன. மூன்றாவதாக வலிப்பு, நரம்பு கோளாறு உள்ளிட்டவை உள்ளனவா என ஆராய்ந்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நான்காவதாக உடல் வளர்ச்சியின் போது காது கேளாமல் இருத்தல், தொடர்ந்து பேசுவதில் தடுமாற்றம், ஆட்டிசம் உள்ளிட்டவை இருந்தால் அதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

உடலில் மாற்றங்கள்

இது தவிர, தொண்டையில் சதை வளர்தல், சிறுநீர் பாதையில் தொற்று உள்ளிட்டவைகளுக்கான சிகிச்சையும் அளிக்கப்படுகின்றன. ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்காக தனித்தனி மருத்துவ பரிசோதனை குழுக்கள் இயங்கி வருகின்றன.பொதுவாக பள்ளிகளில் குழந்தைகளை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் போது, ஐந்தில் ஒரு குழந்தைக்கு கண் பார்வையில் ஏதாவது குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது. அதற்கான மருந்துகள், சிகிச்சைகள் குறிப்பிட்ட குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.வளர் இளம் பருவத்தில் இருக்கும் ஆண், பெண் குழந்தைகளை பெற்றோர் அதிக கவனத்துடன் வளர்க்க வேண்டும். உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கி தன் சுத்தம் உள்ளிட்டவை குறித்து விளக்கி கூற வேண்டும் என, மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் கூறினர்.

57 பேருக்கு இருதய பாதிப்பு

தாளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினர் கூறுகையில், 'கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், 57 மாணவர்களுக்கு இருதய பாதிப்பு இருந்தது கண்டறிந்து, மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், 14 மாணவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இக்குழுவில் மருந்தாளுனர் இருப்பதால், உடல் நலன் பாதிப்பு உள்ள மாணவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு தொடர்ந்துகண்காணிக்கவும், குறிப்பிட்ட நோய் சரியாகும் வரை மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மருத்துவ அதிகாரிகள் வாரந்தோறும் இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ