உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீரோடையில் விதிமுறை மீறி பாலம் அமைக்கும் பணி; உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கிய வருவாய் துறை

நீரோடையில் விதிமுறை மீறி பாலம் அமைக்கும் பணி; உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கிய வருவாய் துறை

கோத்தகிரி;கோத்தகிரியில் நீரோடையில் விதிமுறை மீறி பாலம் அமைக்கும் பணி நடந்த வருவதை தொடர்ந்து, உரிமையாளருக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும், 'நீர் ஆதாரம் உள்ள பகுதிகளை ஆக்கிரமித்தது எவ்வித கட்டுமானமும் இருக்கக்கூடாது,'என, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோத்த கிரி டானிங்டன் கரும்பாலம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான நிலத்திற்கு செல்வதற்காக, முறையான அனுமதி பெறாமல், விதிமுறை மீறி, ஓடையின் இருப்புறமும் 'கான்ரீட்' அமைத்து, பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால், மழை நாட்களில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் தடைப்பட வாய்ப்பு உள்ளது. மேலும், தண்ணீர் தேங்கி அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து சேதம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.தனியாருக்கு சொந்தமான வர்த்தக ரீதியாக கட்டப்பட உள்ள கட்டுமானத்திற்காக, விதிமீறி பாலம் அமைப்பதாகவும், அதனை சம்பந்தப்பட்ட சில அலுவலர்கள், கண்டு கொள்ளாமல் விட்டதாகவும், சமூக ஆர்வலர்கள் சிலர் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அனுப்பி உள்ளனர்.'பாலத்தை அப்புறப்படுத்த வேண்டும்,' என, அப்பகுதி மக்கள் வலியுறுத்திய நிலையில், வருவாய் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, பணியை ஆய்வு செய்தனர். அதில், நில அளவை செய்ததில், விதிமீறல் உறுதி செய்யப்பட்டது. அலுவலர்கள் கூறுகையில், 'விதிமுறை மீறி கட்டுப்பட்டு வரும் பாலத்தை, 10 நாட்களுக்குள் இடித்து, ஓடைக்கு எவ்வித இடையூறு இல்லாமல் கட்டுமானங்களை அப்புறப்படுத்த வேண்டும் என, நிலத்தின் உரிமையாளருக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. அதனை மேற்கொள்ளவில்லையேல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ