உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தயாரிக்கப்பட்ட 500 டன் இயற்கை உரம்!: கிலோ ரூ.5க்கு கிடைப்பதால் சிறு விவசாயிகள் ஆர்வம்

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தயாரிக்கப்பட்ட 500 டன் இயற்கை உரம்!: கிலோ ரூ.5க்கு கிடைப்பதால் சிறு விவசாயிகள் ஆர்வம்

ஊட்டி: ஊட்டி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கடந்தாண்டில், 500 டன் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டதால், விவசாயிகள் பெரும் பயனடைந்து வருகின்றனர். திடக்கழிவு மேலாண்மை என்பது, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான முறையில் திடக்கழிவுகளை சேகரித்து சுத்திகரித்தல்; அகற்றுதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றின் முறையான செயல்முறையாகும். 'திடக்கழிவு என்பது, நகராட்சி கழிவுகள்; தொழிற்சாலை கழிவுகள் அல்லது அபாயகரமான கழிவுகள்,' என, அப்புறப்படுத்தப்படும் பொருட்களை குறிக்கிறது.திடக்கழிவு மேலாண்மையின் முதன்மையான குறிக்கோள், மண் வளப் பாதுகாப்பை ஊக்குவிக்கும் அதே வேளையில், மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலில் கழிவுகளால் ஏற்படும் பாதகமான தாக்கங்களை குறைப்பதாகும்.இந்த நோக்கத்தின் அடிப்படையில், ஊட்டி நகராட்சியில் உள்ள, 36 வார்டுகளில், நாள்தோறும் மட்கும் குப்பை, மட்காத குப்பை சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், தீட்டுக்கல் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது. மட்கும் குப்பையில் இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. மட்காத குப்பை மறுசுழற்சி செய்வதற்காக கொண்டு செல்லப்படுகிறது.

500 டன் இயற்கை உரம்

நகராட்சியில் உள்ள, 36 வார்டுகளில் தினமும் சராசரியாக, 25 டன் மட்கும் குப்பை, மட்காத குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. கடந்தாண்டில், 9 ஆயிரம் டன் மட்கும், மட்காத குப்பைகள் மட்டும் சேகரிக்கப்பட்டது. இதனை தரம் பிரித்த பின், மட்கும் குப்பையில் தினசரி சராசரியாக, 1500 கிலோ இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் கடந்தாண்டில், 500 டன் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டது.இந்த உரம், மாவட்டத்தில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு பெரும் பயனுள்ளதாக உள்ளது. இந்த உரத்தை கிலோ, 5 ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர்.இவர்களை தவிர, பிற விவசாயிகளும் அதிகளவில் வாங்கி செல்வதால் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஊட்டி கமிஷனர் ஏகராஜ் கூறுகையில், ''ஊட்டியில் மட்கும் குப்பைகளில் கடந்தாண்டில், 500 டன் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டது. கிலோ, 5 ரூபாய்க்கு வழங்கப்படுவதால் விவசாயிகள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.இதனை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தரமான காய்கறிகளை உற்பத்தி செய்ய முடியும்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை