மேலும் செய்திகள்
குன்னுாரில் தாயை பிரிந்த காட்டெருமை குட்டி
17-Sep-2024
மஞ்சூர் : 'கெத்தை சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் யானை கூட்டத்திற்கு தொந்தரவு செய்யாமல் பயணிக்க வேண்டும்; விபரீத விளையாட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.நீலகிரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கெத்தை, முள்ளி, பெரும்பள்ளம் வனங்கள் தமிழக - கேரளஎல்லையை ஒட்டி அமைந்துள்ளன. இந்த வனத்தில் யானைகளுக்கான தண்ணீர், உணவு உள்ளிட்டவைகளுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலையாக இருப்பதால், கேரளா வனத்திலிருந்து யானைகள் அடிக்கடி இடப்பெயர்ந்து வருகின்றன. மஞ்சூர் - கோவை சாலையில் மஞ்சூரிலிருந்து கெத்தை, பெரும்பள்ளம் மற்றும் முள்ளி வரை சாலைகளில் யானைகள் கூட்டமாக அடிக்கடி உலா வருகின்றன.தற்போது, மஞ்சூர் - கெத்தை இடையே சாலையில் குட்டிகளுடன், 5 யானைகள் உலா வருகிறது. உணவுக்காக சாலையோரத்தில் இருப்புறம் உள்ள மரக்கிளைகளை உடைத்து வீசி எறிந்து, நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகைகளை சேதப்படுத்தி வருகின்றன. அவ்வழியாக வரும் வாகனங்களுக்கு வழிவிடாமல் சாலையில் குறுக்கே நிற்பதும் தொடர்கிறது. இச்சாலையில் வரும் வாகன ஓட்டிகள் யானைகளுக்கு எவ்வித தொந்தரவு கொடுக்காமல் மிகுந்த கவனத்துடன் பயணிக்க வேண்டும். வனத்துறையினர் கூறுகையில், 'கெத்தை வனத்தில் யானைகளுக்கு ஏற்ற சீதோஷ்ணநிலை உள்ளது. வனத்தில் சுற்றித்திரியும் யானைகள் கூட்டமாக சாலையில் உலா வருகின்றன. வாகனங்களுக்கு தொந்தரவு செய்யாமல் இருக்க வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் எக்காரணத்தை கொண்டும் யானை கூட்டத்திற்கு தொந்தரவு செய்யாமல் பயணிக்க வேண்டும். விபரீத விளையாட்டில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
17-Sep-2024