மேலும் செய்திகள்
கொடிநாள் நிதி வசூல் துவக்கம்
08-Dec-2025
ஊட்டி: ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில், முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில், கொடிநாள் தினத்தை முன்னிட்டு, கொடி நாள் நிதி வழங்கி, கலெக்டர் வசூலை துவக்கி வைத்தார். தொடர்ந்து, அவர் பேசியதாவது: நாட்டின் முப்படைகளில் பணியாற்றிய பாதுகாப்பு வீரர்கள் தங்களது இளமை காலத்தில் குடும்பத்தை பிரிந்து, கடினமான பணிகளை நமது தேசத்திற்காக தன்னலம் கருதாமல், தங்களது உயிர் மற்றும் உடல் உறுப்புகளை இழந்து நாட்டிற்கு பணியாற்றி வருகின்றனர். அவர்களது அயராத கட மைகளுக்கு நாம் காட்டும் நன்றியுணர்வாக, ஆண்டு தோறும் டிச., 7ல் நாடு முழுவதும் படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. நம் மாவட்டத்தில், 2024 டிச., 7 முதல், 2025, டிச., 6ம் தேதிவரை, ஒரு கோடியே, 15 லட்சத்து, 82 ஆயிரத்து, 474 ரூபாய் படைவீரர் கொடிநாள் நிதியாக வசூலிக்கப்பட்டது. இது, அரசு நிர்ணயித்த இலக்கிற்கு, 99 சதவீதம் ஆகும். இந்த கொடி நாள் நிதியை திரட்டிய அரசு அலுவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாராட்டுக்கள். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற முப்படை வீரர்களின் கைம் பெண்களை கவுரவிக்கும் விதமாக, சால்வை அணிவித்து, 26 பயனாளிகளுக்கு, 37 லட்சத்து, 36 ஆயிரத்து, 315 ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதில், கர்னல் கோபாலகிருஷ்ணன், லெப் கர்னல்கள் நரோத்தம் சர்மா, ஜான் டேனியல் (ஒய்வு) முன்னாள் படை வீரர் நலத்துறை உதவி இயக்குனர் சரவணன் மற்றும் அலுவலக கண்காணிப் பாளர் இந்திரகுமார் உட்பட, முன்னாள் படை வீரர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
08-Dec-2025