| ADDED : அக் 08, 2011 11:03 PM
பந்தலூர் : பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டு விதிமீறிய வாகனங்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.பந்தலூர், கூடலூர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ராமன், மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.கூடலூர் தொரப்பள்ளி முதல் ஆய்வு மேற்கொண்டதில் தொரப்பள்ளி பகுதியில் உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.தொரப்பள்ளியில் இருந்து பந்தலூர் வரை 25 வாகனங்கள் தணிக்கை செய்ததில், 25 வாகனங்கள் விதிமீறி இயக்கியதுடன் அதிகளவு பாரம் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இந்த வாகனங்கள் மீது மொத்தம் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று காலை பந்தலூர் பகுதியில் உள்ள ஆட்டோ, ஜீப், ஆகியவற்றில் ஆய்வு நடந்தது.'பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தபோதும், மாநில அரசு கட்டணங்களை உயர்த்தாத நிலையில், ஆட்டோ மற்றும் தனியார் ஜீப்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப கட்டணங்களை ஏற்றுவது கண்டிக்கத்தக்கது; விதிமுறையை மீறி வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என போக்குவரத்து அலுவலர் வெங்கட்ராமன் எச்சரிக்கை விடுத்தார்.