முதல்வர் விழாவில் பழங்குடியினருக்கு பட்டா; பந்தலுார் பகுதிகளில் ஏற்பாடு தீவிரம்
பந்தலுார்; ஊட்டியில் மாநில முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியின் போது பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில், பட்டா வழங்க தடை ஆணை உள்ளது. மேலும், விற்பனை செய்யும் நிலங்களுக்கு பட்டா மாற்றம் செய்வதற்கு, மாவட்ட கலெக்டர் தலைமையிலான கமிட்டியிடம் அனுமதி பெற வேண்டும்.இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் மண்ணின் மைந்தர்களான, பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை மாநில அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்காக ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில், வீடு கட்டி குடியிருக்கும் பழங்குடியினர் குறித்த கணக்கெடுப்பு கடந்த இரண்டு மாதங்களாக நடந்தது. அதில், மாவட்டம் முழுவதும், 800 பேருக்கு, ஊட்டியில் வரும், 6ல் நடக்கும் அரசு விழாவில், பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், அவர்களை ஊட்டி அழைத்து செல்வதற்கான பணிகள், பெயர் பதிவு ஆகியவை நடந்து வருகிறது.