யானையிடமிருந்து மக்களை பாதுகாக்க சாலையோரம் முட்புதர்கள் அகற்றம்
கூடலுார்; முதுமலை மசினகுடி -ஆச்சக்கரை சாலையில் நடந்து சென்றவர் யானை தாக்கி இறந்ததை தொடர்ந்து, வனத்துறையினர் அப்பகுதி சாலையின் இரு புறமும் முட்புதர்களை அகற்றி சீரமைப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். முதுமலை மசினகுடி ஆச்சக்கரை பகுதியை சேர்ந்தவர் மேத்தா,71. தனியார் ரிசார்ட் உரிமையாளரான இவர், 18ம் தேதி, மாலை ஆச்சக்கரை பகுதியில் சாலையில் நடந்து சென்ற, காட்டு யானை அவரை தாக்கி காயமடைந்தார். அவருக்கு, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது போன்ற சம்பவங்களை தவிர்க்க, சாலையோர முற்புதர்களை அகற்ற மக்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து, மசினகுடி வனச்சரகர் ராஜன் மற்றும் வன ஊழியர்கள் அப்பகுதி ஆய்வு செய்து, பொக்லைன் உதவியுடன், 500 மீட்டர் நீளமுள்ள சாலையின் இரு புறமும், 20 மீட்டர் அகலத்தில், புதர்களை அகற்றி சீரமைத்தனர். பல ஆண்டு கோரிக்கைக்கு தீர்வு கிடைத்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், 'சாலையோரம் முட்புதர்கள் அகற்றப்பட்டதன் மூலம், மக்கள் இச்சாலையில் நடந்து வரும்போது, துாரத்தில் இருந்து, யானைகள் நடமாட்டத்தை அறிந்து, யானையிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும்,' என்றனர்.