| ADDED : ஜூன் 03, 2024 02:47 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பெய்த மழையால் பருத்தி பஞ்சு விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கிலோ ரூ.48 முதல் ரூ.50க்கு விற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம், இருதயபுரம், நெடும்புலிக்கோட்டை, மங்கலம், அத்தானுார், ராமநாதமடை, புல்லமடை, சிலுகவயல், இரட்டையூருணி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில், அதிகளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பருத்தி மகசூல் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையால் பருத்தி விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பஞ்சு கிலோ ரூ 63 வரை, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், மழையால் பஞ்சு விலை வீழ்ச்சியை சந்தித்து தற்போது விவசாயிகளிடமிருந்து ரூ.48 முதல் ரூ.50 வரை விலை போகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வியாபாரிகள் கூறுகையில், வயல்களில் உள்ள பஞ்சுகள் மழையில் நனைந்து ஈரப்பதமான நிலையில் விற்கின்றனர். எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்காகவே தற்போது விலையை குறைத்து விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கிறோம். தரமான பஞ்சுகள் விற்றால் விலை அதிகம் கிடைக்கும் என்றனர்.