| ADDED : ஜூன் 07, 2024 07:24 PM
ராமேஸ்வரம்:-ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் பலத்த சூறாவளியால், கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்ததில், ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்டு, ஐந்தாண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த மீன் இறக்கும் பாலம் இடிந்து கடலில் மூழ்கியது.தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் பகுதியில் சூறாவளி வீசுவதால் மன்னார் வளைகுடா கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன. தனுஷ்கோடியில் உள்ள முகுந்தராயர்சத்திரம் கடற்கரையில், 7 கோடி ரூபாயில், 2017ல் கட்டப்பட்ட 100 மீ., நீள மீன் இறக்கும் பாலம் மீது ராட்சத அலைகள் மோதின. இந்நிலை, கடந்த நான்கைந்து ஆண்டுகளாக தொடர்ந்ததால், அந்த இரும்பு பாலத்தை மீனவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இப்போது அதிகமான அலை வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல், 20 அடி நீளத்திற்கு பாலம் இடிந்து கடலில் மூழ்கியது. இதனால் மீனவர்கள் பயன்படுத்தாமலே பாலம் இடிந்து, 7 கோடி ரூபாய் வீணாகியது. சூறாவளியால் மன்னார் வளைகுடா கடலில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதை தவிர்த்தனர்.