உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் பூப்பல்லக்கில் கோயில் திரும்பினார்

எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் பூப்பல்லக்கில் கோயில் திரும்பினார்

பரமக்குடி : பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இருந்து கோயிலுக்கு திரும்பினார்.எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு பாத்தியமான பெருந்தேவி, வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி வசந்த விழா நடந்தது. மே 23 அதிகாலை 5:30 மணிக்கு பெருமாள் வைகை ஆற்றில் கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளினார்.பின்னர் குதிரை வாகனத்தில் புறப்பாடாகி ஆயிரம் பொன் சப்பரத்தில் சேவை சாதித்து இரவு வண்டியூரை அடைந்தார்.தொடர்ந்து சேஷ வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு காட்சியளித்தும், தசாவதார சேவை, கருட, அனுமன் வாகனங்களிலும் அருளினார்.நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை கள்ளழகர் திருக்கோலத்தில் அருள்பாலித்த பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டது.இரவு 11:00 மணிக்கு பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப் பல்லக்கில் கள்ளழகர் வைகை ஆற்றில் இருந்து புறப்பாடாகி நகர் வலம் வந்தார். அப்போது பக்தர்கள் தேங்காய் உடைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.நேற்று காலை 10:00 மணிக்கு கருப்பண சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்ததும் 11:00 மணிக்கு மீண்டும் பெருமாள் கோயிலை அடைந்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.இரவு 7:00 மணி முதல் கள்ளழகர் திருக்கோலத்தில் கண்ணாடி சேவையில் அருள் பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்