உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பவளப்பாறை வளர்ச்சியை பாதிக்கும் சேதமடைந்த வலைக்கழிவுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வனத்துறையினர்

பவளப்பாறை வளர்ச்சியை பாதிக்கும் சேதமடைந்த வலைக்கழிவுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வனத்துறையினர்

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா கடற்கரை தனுஷ்கோடியில் இருந்து ரோஜ்மா நகர் வரை 130 கி.மீ.,க்கு நீண்ட நெடிய வெள்ளை மணற்பரப்பைக் கொண்டுள்ளது.மன்னார் வளைகுடா கடற்கரையை யொட்டி ஏராளமான சிறிய அளவிலான மீன்பிடி துறைமுகங்கள் மீனவர் கிராமங்கள் உள்ளன.நாள்தோறும் பல ஆயிரம் நாட்டுப் படகுகள், விசைப்படகுகள், சிறு வத்தைகளில் மீன் பிடிக்க செல்கின்றனர்.ராமேஸ்வரம் முதல் துாத்துக்குடி வரை 21 தீவுகளை கொண்டுள்ள மன்னார் வளைகுடா கடலில் தீவுகளுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவது பவளப்பாறைகள். இந்த பவளப்பாறைகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி பெருக்கத்தால் தீவுகளின் உறுதித் தன்மை நிலையாக நிற்கும்.நான்கு புறமும் சுற்றி அடிக்கும் பேரலைகளுக்கு மத்தியில் தீவுகளுக்கு பாதுகாப்பாக பவளப்பாறைகள் விளங்குகிறது.மீன் பிடிக்க செல்லும் போது பிளாஸ்டிக் குப்பை, நைலான் கயிறு உள்ளிட்ட மக்காத பொருட்களை கடலுக்குள் போடுவதால் அவை நாளடைவில் அரியவகை பவளப்பாறைகளில் சிக்கி அவற்றின் வளர்ச்சியை தடுக்கிறது. கீழக்கரை மன்னார் வளைகுடா வனச்சரக அலுவலர் செந்தில்குமார் கூறியதாவது:கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத தன்மை உடைய பொருள்களை கடலுக்குள் வீசக்கூடாது. அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகளால் கடலின் தகவமைப்பு மற்றும் சுற்றுப்புற சூழலிகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் நிலை உள்ளது.அவை பவளப்பாறைகளின் வளர்ச்சியையும் மீன்களின் இனப்பெருக்கத்தையும் தடுப்பதாக அமைகிறது. அரிய வகை ஆமை, டால்பின், திமிங்கலம், சுறா, கடல் பசுக்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் இது போன்ற பிளாஸ்டிக் குப்பையால் பாதிப்பை சந்திக்கின்றன.இதுகுறித்து மீனவர்களுக்கு உரிய விளக்கம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை