| ADDED : ஆக 05, 2024 09:56 PM
பெருநாழி:அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா மாகாணத்தில் மொய் விருந்து நடத்தி, ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர்வழித்தடத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி இளைஞர்கள் துார் வாரியுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அருகே இடிவிலக்கி ஊராட்சி கருத்தறிவான் கிராமத்தில் துவங்கி கோசராமன், இடிவிலக்கி, பூலபத்தி உள்ளிட்ட மலட்டாற்றின் வலது பிரதான கால்வாயை துார்வாரும் பணிகள் ஜூலை 25 முதல் நடக்கிறது.இந்த நீர்வழித்தடத்தின் இரு புறங்களிலும் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை, இயந்திரத்தின் உதவியுடன் அகற்றி கரையைப் பலப்படுத்தி நீர் வழித்தடத்தை செம்மைப்படுத்தும் முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.'மெகா பவுண்டேஷன்' நிறுவனர் நிமல் ராகவன் உதவியுடன், ஆப்பநாடு இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் சபை அறக்கட்டளை சார்பில் நீர் வழித்தடக் கால்வாயை மீட்டெடுக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.ஆப்பநாடு இளைஞர் மற்றும் விவசாயிகள் சபையின் அறக்கட்டளை நிர்வாகி இன்ஜினியர் மனோஜ் கூறியதாவது:அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா மாகாணத்தில் வாழும் தமிழர்களிடம் சமீபத்தில் மொய் விருந்து நடத்தப்பட்டது. அதில் தொகையைக் கொண்டு மலாட்டாற்றின் வழித்தடத்தில் உள்ள கால்வாய்களை சீரமைக்கும் பணிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தற்போது பணிகள் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.