| ADDED : ஆக 19, 2024 12:41 AM
திருவாடானை : ஆரம்ப சுகாதார நிலையங்களில் விஷபூச்சிகள் கடிக்கு மருந்துகள் இல்லாததால் உயிர்பலி அதிகரித்துள்ளது.திருவாடானை தாலுகாவில் ஆறு ஆரம்பசுகாதார நிலையங்களும், 24 துணை சுகாதார நிலையங்களும் உள்ளன. தற்போது இத் தாலுகாவில் விவசாய பணிகள் தீவிரமாக நடக்கிறது. வயல்களுக்கு இரை தேடி வரும் கண்ணாடிவிரியன், கட்டு விரியன் போன்ற விஷத்தன்மை கொண்ட பாம்புகள் அதிகம் காணப்படுகின்றன. அவ்வப்போது, சிலர் பாம்பு கடிக்கு ஆளாகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பிள்ளையாரேந்தல் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் வைக்கோல் அள்ளும் போது பாம்பு கடித்து இறந்தார். விஷத்தை முறிக்க போடப்படும் மருந்தின் விலை அதிகம் என்பதால், பெரும்பாலானோர் அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்பு விஷ முறிவு மருந்து ஸ்டாக் இல்லை. இதனால் நீண்டதுாரம் உள்ள திருவாடானை, ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலர் இறக்கின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: வயல்களில் தற்போது விதைப்பு பணிகள் நடக்கிறது. பயிர்கள் வளர்ந்து வரும் போது தண்ணீர் தேங்கியிருப்பதால் இரைக்காக பாம்புகள் அதிகமாக வரும். அப்போது பாம்பு கடிப்பது வழக்கமாக நடந்து வருகிறது. ஆகவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் விஷ முறிவு மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றனர்.