| ADDED : ஜூலை 25, 2024 11:52 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கேணிக்கரை மெயின் ரோட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளால் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம் நகரின் மையப் பகுதியான கேணிக்கரை ரோட்டில் ஏராளமான வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளன. குறிப்பாக கேணிக்கரை, அரண்மனை, மதுரையார் ரோடு, தேவிப்பட்டினம் ரோடு, நான்கு ரோடு சந்திப்பில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் வாகனங்கள் செல்கின்றன.இது போக சிலர் ரோட்டை ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனர். டூவீலர், கார்களை நிறுத்துகின்றனர்.இதனால் கேணிக்கரை ரோட்டில் அலுவலகம், பள்ளி, கல்லுாரி துவங்கும், முடியும் காலை, மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் வாடிக்கையாகியுள்ளது.வாகன ஓட்டிகள் மட்டுமின்றி நடந்து செல்லும் பொது மக்களுக்கும் விபத்து அபாயம் உள்ளது. எனவே ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.