இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்திய 11.300 கிலோ தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது
ராமநாதபுரம்:இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்திவரப்பட்ட 11 கிலோ 300 கிராம் தங்கத்தை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து இலங்கையை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் கடல் வழியாக தங்கம், போதை பொருட்கள், பீடியிலைகள், மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தல் அதிகமாக நடக்கிறது. கடத்தல் குறித்து இந்தியா- இலங்கை கப்பற்படையினர் தொடர்ந்து ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதியில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.இலங்கை கடற்படையினருக்கு தமிழகத்திற்கு தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் புத்தளம் மாவட்டம் கல்பிட்டியிலிருந்து சட்ட விரோதமாக கடல் வழியாக கடத்த இருந்த 11கிலோ 300 கிராம் தங்க கட்டிகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து கல்பிட்டியை சேர்ந்த 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் இலங்கை சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்தியாவில் ரூ.10 கோடி. இலங்கையில் இதன் மதிப்பு ரூ.20 கோடி என தெரிய வந்துள்ளது.