வீட்டு பத்திரத்தை தர மறுத்த வங்கிரூ.25,000 இழப்பீடு வழங்க உத்தரவு
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் அடகு வைத்த வீட்டு பத்திரத்தை தராமல் இழுத்தடித்த கூட்டுறவு வங்கி பாதிக்கப்பட்டவருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. ராமநாதபுரம் உச்சிப்புளி அரசு மேல்நிலைப் பள்ளி தெருவில் வசித்து வருபவர் தங்கசாமி. இவர் தனது வீட்டை மகன் கண்ணனுக்கு வழங்கியுள்ளார். கண்ணன் வீட்டின் பத்திரத்தை உச்சிப்புளியில் உள்ள ராமநாதபுர மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை அலுவலகத்தில் அடகு வைத்து ரூ.10 லட்சம் பெற்றுள்ளார். வட்டியுடன் ரூ.13 லட்சம் செலுத்தினால் தான் பத்திரம் வழங்கப்படும் என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை செலுத்த தயாராக இருந்தும் ஓராண்டுக்கும் மேலாக பத்திரத்தை தர மறுப்பதாக ராமநாதபுரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தங்கசாமி முறையிட்டுள்ளார். இதனை விசாரித்த நீதிபதி பாலசுப்பிரமணியன் சம்பந்தப்பட்ட வங்கி பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு ரூ.25 ஆயிரம், வழக்குசெலவு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.