| ADDED : ஜன 21, 2024 03:21 AM
தொண்டி: தொண்டி உந்திபூத்த பெருமாள் கோயில் முன்பு புதிய கொடிமரம் அமைக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். கோயிலுக்கு அழகு தருவது கொடிமரம். தீய சக்திகளை அகற்றுவதன் பொருட்டும், இறை ஆற்றலை அதிகரிக்கும் வகையில் கோயில்களின் முன்பு கொடிமரம் நிறுவப்படுகிறது. தொண்டியில் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான உந்திபூத்த பெருமாள் கோயில் உள்ளது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் இங்கு அருள்பாலிக்கிறார். ராமானுஜர் வழிபட்ட தலம். இங்கு கருடர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், ஆதிேஷசன், ராமானுஜர் சன்னதிகள் உள்ளன. புரட்டாசி மாதத்தில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். இங்கு 33 அடி உயரத்தில் கொடிமரம் அமைக்கும் பணி ஓராண்டிற்கு முன்பு துவங்கியது. தேக்கு மரத்தால் கொடிமரம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தது.இதையடுத்து புதிய கொடிமரத்திற்கு காலை 9:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து பட்டாச்சாரியார் கருணாகரன் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கொடிமரம் நிறுவப்பட்டது. ஹிந்து அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (ஜன.21) காலை 9:00 முதல் 10:30 மணிக்குள் கொடிமரத்திற்கு கும்பாபிேஷகம் நடக்கிறது.