| ADDED : பிப் 22, 2024 11:13 PM
பரமக்குடி : -பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பூச்சொரிதல், பங்குனி விழாக்கள் மார்ச் மாதம் நடக்க உள்ளது.மார்ச் 1ல் பூச்சொரிதல் விழாவில் மலர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மார்ச் 16 இரவு பங்குனி திருவிழா காப்பு கட்டுதல், மார்ச் 17 காலை கோயில் கொடிமரத்தில் சிங்கக் கொடி ஏற்றப்பட்டு பங்குனி திருவிழா துவங்குகிறது.அன்று முதல் தினமும் அம்மன் பூதகி, சிம்மம், பல்லக்கு, அன்னம், ரிஷபம், யானை, கிளி, காமதேனு வாகனங்களில் வீதியுலா வருகிறார். 4ம் நாளான மார்ச் 20 காலை அம்மன் காளி அலங்காரத்திலும், மாலை 5:00 மணிக்கு இரட்டை மாடுகள் பூட்டிய வண்டியில் வண்டி மாகாளி சூரசம்ஹாரம் நடக்கிறது.மார்ச் 24 இரவு குதிரை வாகனத்தில் ராஜாங்க திருக்கோலமும், மார்ச் 25 காலை துவங்கி அக்னி சட்டி ஊர்வலம், இரவு 8:00 மணிக்கு மின் தீப அலங்காரத் தேரில் நான்கு மாட வீதிகளில் அம்மன் சர்வ அலங்காரத்துடன் வலம் வர உள்ளார்.மறுநாள் அதிகாலை கள்ளர் திருக்கோலத்துடன்வைகை ஆற்றில் அம்மன்எழுந்தருள்கிறார். இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். மேலும் மார்ச் 27 அதிகாலை 4:00 மணி முதல் பல ஆயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். காலை 11:00 மணிக்கு பாலாபிஷேகம் நடக்கிறது.ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள்,ஆயிர வைசிய சபையினர் செய்து வருகின்றனர்.