ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஹிந்து மக்கள் கட்சி எதிர்ப்பு
ராமேஸ்வரம்:- ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பின் போது மீனவர்கள் மறியல் செய்தால் அதை கண்டித்து போராட்டம் நடத்துவோம் என ஹிந்து மக்கள் கட்சியினர் தெரிவித்தனர்.இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஹிந்து மக்கள் கட்சி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பிரபாகரன் மனு அனுப்பி உள்ளார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது: இந்திய மக்கள் பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சிலர் பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக திறப்பு விழாவின் போது பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மறியல் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.சில ஆண்டுகளாக எல்லையை தாண்டி இலங்கைப்பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை கண்டித்து அந்நாட்டு மீனவர்கள் போராட்டம் நடத்தியதன் விளைவாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை இலங்கை அரசு கைது செய்தது. இதே போல் இலங்கை மீனவர்கள் நம் எல்லைக்குள் மீன் பிடித்தால் இந்திய கடற்படை வேடிக்கை பார்க்குமா.சட்டத்தை மீறிய செயலுக்கு இரு நாட்டு பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுப்பது வழக்கமானது தான். இச்சூழலில் போராட்டம் என்ற பெயரில் புகழ் பெற்ற பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மீனவர்கள் மறியல் செய்தால் ராமேஸ்வரம் பகுதி மீனவர் சங்கங்களுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்துவோம். மத்திய அரசுக்கு எதிராக செயல்படும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.