உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தனுஷ்கோடி கடற்கரையில் ஜன.21ல் பிரதமர் மோடி யாகத்தில் பங்கேற்பு நாளை ராமேஸ்வரம் கோயிலில் பூஜை

தனுஷ்கோடி கடற்கரையில் ஜன.21ல் பிரதமர் மோடி யாகத்தில் பங்கேற்பு நாளை ராமேஸ்வரம் கோயிலில் பூஜை

ராமேஸ்வரம்,:அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிேஷகத்திற்காக விரதம் இருந்து வரும் பிரதமர் மோடி ஜன.,21ல் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்ய உள்ளார். முன்னதாக நாளை ராமேஸ்வரம் கோயிலில் பூஜை செய்து தீர்த்தங்களை சேகரிக்கிறார்.நாளை(ஜன.,20) மதியம் 2:00 மணிக்கு பிரதமர் மோடி ராமேஸ்வரத்திற்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கி காரில் ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்கிறார். மதியம் 2:10 முதல் 2:45 வரை நடக்கும் ராமரின் கீர்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.மதியம் 2:45 முதல் 3:30 மணி வரை கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் பிரதமர் மோடி புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கிறார். மதியம் 3:35 முதல் இரவு 7:15 மணி வரை நடக்கும் ராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.இரவு 7:25 மணிக்கு ராமகிருஷ்ண மடத்திற்கு சென்று ஓய்வெடுக்கிறார்.

உபவாசம்

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி 11 நாட்கள் உபவாசம் (விரதம் ) இருக்கும் பிரதமர் மோடி தினமும் ஒரு வேளை மட்டும் சாப்பிடுகிறார். அதனால் ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடத்தில் சிறப்பு பூஜை செய்து கட்டில் மெத்தை இன்றி தரையில் எளிமையான படுக்கை விரித்து ஓய்வெடுக்க உள்ளார்.

தனுஷ்கோடியில் பூஜை

ஜன.,21 காலை 9:00 மணிக்கு மடத்தில் இருந்து காரில் புறப்பட்டு ஸ்ரீ ராமர் இலங்கைக்கு பாலம் அமைத்த தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு செல்கிறார். அங்கு காலை 9:30 முதல் 10:00 மணி வரை ஸ்ரீ ராமரை வேண்டி யாகம் வளர்த்து பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்கிறார்.பின் தனுஷ்கோடி அருகே உள்ள விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டிய இடத்தில் அமைந்துள்ள கோதண்டராமர் கோயிலில் காலை 10:30 முதல் 11:00 மணி வரை சுவாமி தரிசனம் செய்கிறார். ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11:30 மணிக்கு ஹெலிகாப்டரில் மதுரை புறப்படுகிறார். அங்கிருந்து விமானத்தில் டில்லி செல்கிறார்.

நாளை காலை முதல் கோயிலில்பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை

ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறியிருப்பதாவது: பிரதமர் வருகையை முன்னிட்டு ஜன.20ல் (நாளை) ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு மதியம் 12:00 முதல் 2:30 மணி வரை அனைத்து பஸ்களும் இயங்காது. அன்று மதியம் 12:00 மணி முதல் ஜன.21 வரை தனுஷ்கோடிக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளை காலை 8:00 முதல் மாலை 6:00 மணி வரை ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.ஜன.21ல் ராமேஸ்வரம் நகரில் காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரை பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஜன.20, 21ல் கனரக வாகனங்கள் ராமேஸ்வரம் நகருக்குள் வர அனுமதியில்லை.ராமேஸ்வரத்தில் ட்ரோன் கேமரா பயன்படுத்துவதற்கும்தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை