| ADDED : செப் 15, 2011 09:13 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கலவரத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம், மாவட்ட முதன்மை நீதிபதி பாலசந்திரகுமார் சிகிச்சை முறை குறித்து விசாரித்து ஐகோர்ட்டிற்கு அறிக்கை அனுப்பியுள்ளார். பரமக்குடி கலவரத்தில் காயமடைந்த பாம்பூர் சந்திரன், என். பெத்தானேந்தல் வெள்ளைச்சாமி, அம்மன்கோவில் செந்தில், எஸ்.காவனூர் இஸ்ரவேல், தனிக்கொடி, பரமக்குடி பாரதிநகர் பாண்டி ஆகியோர் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களை, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி பாலசுந்திரகுமார், கலெக்டர் அருண்ராய் ஆகியோர் நேற்று சந்தித்தனர். 'சிகிச்சை முறையாக அளிக்கப்படுகிறதா, நல்ல உணவு வழங்கப்படுகிறதா, சிறப்பு சிகிச்சை தேவைப்படுகிறதா'' என நீதிபதி கேட்டார். நோயாளிகள், 'நன்கு சிகிச்சை தரப்படுகிறது. சிறப்பு சிகிச்சை தேவையில்லை' என தெரிவித்தனர். கலெக்டர் அருண்ராய் கூறியதாவது: மதுரை ஐகோர்ட் உத்தரவுப்படி, நோயாளிகளிடம் காயங்கள் மற்றும் சிகிச்சை குறித்து விசாரித்தோம். இதன் அறிக்கை இன்று(செப்.,16) ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும், என்றார். அரசு மருத்துவமனை இணை இயக்குனர் பாலசந்திரன், கண்காணிப்பாளர் ஜமுனாராணி ஆகியோர் சிகிச்சை முறைகள் பற்றி நீதிபதியிடம் தெரிவித்தனர்.