உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பஸ் இன்றி 3 கி.மீ., நடைபயணம் : குமுறும் பால்கரை கிராம மக்கள்

பஸ் இன்றி 3 கி.மீ., நடைபயணம் : குமுறும் பால்கரை கிராம மக்கள்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஆர்.எஸ். மடை பால்கரையை சேர்ந்த மாணவர்கள் பஸ் வசதியில்லாததால் மூன்று கி.மீ., நடந்து செல்கின்றனர். ராமநாதபுரம் ஆர்.எஸ். மடை அருகே உள்ளது பால்கரை. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கு ரோடு வசதி இல்லாமல் இருந்தது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ரோடு அமைக்கும் பணி துவங்கியது. தற்போது மெட்டல்ரோடு மட்டுமே போடப்பட்டுள்ளது. கருங்கற்கள் பெயர்ந்த நிலையில் இங்கு இயக்கப்பட்ட பஸ் நிறுத்தப்பட்டது. வாகனங்கள் வயலில் இறங்கி செல்லும் நிலை இருந்தது. இக்கிராமத்தின் அருகில் உள்ள அச்சடிப்பிரம்பிற்கு அமைச்சர் வருவதையொட்டி, ரோடு பணிகள் தற்காலிகமாக சரி செய்யப்பட்டன. வீடுகளுக்கு வரவேண்டிய காவிரி குடிநீர், உடைந்த குழாய்களால் வயல்களில் வீணாகி வருகிறது.

இது குறித்து இப்பகுதியினரின் குமுறல்: ரஞ்சிதா, மாணவி, பால்கரை : ரோடு வசதி இல்லாததால் பஸ்கள் ஊருக்குள் வருவதில்லை. கீழக்கரை ரோட்டில் உள்ள ஆர்.எஸ்.மடை பஸ் ஸ்டாப்பிற்கு நடந்து செல்கிறோம்.எங்கள் பகுதிக்கு பஸ் விடவேண்டும். தங்கவேல்: தார்ரோடு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டும், ஒப்பந்ததாரர் இதுவரை ரோடு அமைக்கவில்லை. ராமநாதபுரத்திற்கு சென்று பொருட்கள் வாங்கி வரும் பெண்கள் வெயிலில் நடந்து வர சிரமப்படுகின்றனர். இரவில் தெருக்கள் இருளில் மூழ்கி இருக்கும். கலெக்டர் வருவதையொட்டி சி.எப்.எல்., பல்புகள் போட்டுள்ளனர். ஊராட்சி தலைவரிடம் கேட்டால், பதில் சொல்வதில்லை.

பூச்சரன் : காவிரி குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. மேல்நிலை தொட்டியில், அரை தொட்டி மட்டுமே தண்ணீர் ஏற்றப்படுகிறது. அது இங்குள்ள மக்களுக்கு போதவில்லை. மணல் கலந்த தண்ணீரைத்தான் குடிநீராக பயன்படுத்தி வருகிறோம். தெரு குழாய்களில் தண்ணீர் வராததால், அவற்றை முட்களை வைத்து பாதுகாத்து வருகிறோம். கவுசல்யா : தார் ரோடு அமைத்து விரைவில் பஸ் விட வேண்டும். அந்த பஸ்களையும் மாணவர்களின் நலன் கருதி காலை 7.30, மாலை 5.30 மணிக்கு இயக்க வேண்டும். போதிய அளவு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி