| ADDED : ஜன 28, 2024 01:54 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி, கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடுவர். சமீபத்தில், ராமேஸ்வரம் கோவிலில் தரிசிக்க வந்த பிரதமர் மோடி, முதலில் இந்த அக்னி தீர்த்தத்தில் தான் நீராடினார்.அக்னி தீர்த்த கடலில் இப்பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக கலப்பதால் மாசு ஏற்படுகிறது. உயர் நீதிமன்றம் மதுரை கிளை கண்டித்து, இதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது.ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் அக்னி தீர்த்த கடற்கரையில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவுநீரை சுத்திகரித்தது. ஆனால், நேற்று, வாறுகாலில் ஏற்பட்ட அடைப்பால், கழிவுநீர் அக்னி தீர்த்த சாலையில் பெருக்கெடுத்து தீர்த்த கடலில் கலந்தது. இதனால் தீர்த்தம் கடற்கரை முழுதும் துர்நாற்றம் வீசியதால் பக்தர்கள் அருவருப்பு அடைந்தனர்.கழிவுநீரை திறந்து விடும் லாட்ஜ் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அக்னி தீர்த்தத்தில் சுகாதாரம் பராமரிக்க நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.