| ADDED : ஏப் 12, 2024 10:51 PM
ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளில் 2011 முதல் பாதாள சாக்கடை திட்டம்செயல்படுத்தப்படுகிறது. நகரில் சேகரிக்கப்படும் கழிவு நீரை வெளியேற்ற சிதம்பரம்பிள்ளை ஊருணி, சிங்காரத்தோப்பு, குண்டூரணி, நாகநாதபுரம், இந்திராநகர் ஆகிய 5 இடங்களில் கழிவு நீரை சேகரிக்க பம்பிங் நிலையங்கள் உள்ளன. இந்த 4 இடங்களில் சேகரிக்கப்படும் கழிவு நீர் கடைசியாக இந்திரா நகர் பம்பிங் நிலையத்திற்கு அனுப்பபட்டு கழுகூரணியில் சாலைக்குடியிருப்பு பகுதியில் செயல்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. குழாய்கள் சேதமடைந்து அடைப்புகள் காரணமாக கழிவுநீர் தேங்குவது வாடிக்கையாகியுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம் குண்டுக்கரை காந்தாரி அம்மன் கோவில் ரோடு, அகில் கிடங்கு வீதி ஆகிய இடங்களில் கழிவுநீரை உறிஞ்சி எடுத்தாலும் மீண்டும் மீண்டும் ரோட்டில் குளம் போல கழிவுநீர் தேங்குவது வாடிக்கையாகியுள்ளது. துர்நாற்றத்தால் குழந்தைகள், முதியவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல், வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகின்றனர். கொசுத்தொல்லை அதிகரித்துஉள்ளதால் மலேரியா, டெங்கு அச்சத்தில் மக்கள்உள்ளனர். இப்பிரச்னைக்கு நகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.