தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
ராமேஸ்வரம்: விடுமுறை தினத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமானோர் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். அவர்கள் தரிசனம் செய்து விட்டு தனுஷ்கோடியில் புயலில் இடிந்த சர்ச், கோயில்களை காணவும், அரிச்சல் முனை கடற்கரையிலும் குவிந்தனர். அங்குள்ள கடலில் விபரீதம் தெரியாமல் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து விளையாடினர். இதனை கண்ட போலீசார் கடலில் குளிக்க வேண்டாம் என எச்சரித்தும், சுற்றுலா பயணிகள் கண்டுகொள்ளவில்லை. சுற்றுலா வாகனத்தை நிறுத்த தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பார்க்கிங் வசதி இல்லாததால், சாலை இருபுறமும் நிறுத்திய வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.