| ADDED : ஜூலை 04, 2024 01:05 AM
சேலம்: சேலம், கொண்டலாம்பட்டி பகுதி அ.தி.மு.க., செயலாளர் சண்முகம். 54. இவர், நேற்று இரவு, தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, தாதகாப்பட்டி இட்டேரி சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில், மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.இதையறிந்த அவரது குடும்பத்தினர் உட்பட அ.தி.மு.க.,வினர் சம்பவ இடத்தில் குவிந்தனர். மேலும், தகவலறிந்து போலீசாரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எத்தனை பேர்? கொலைக்கான காரணமாக அரசியல்? தொழில் போட்டி? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை செய்கின்றனர்.கொலை செய்யப்பட்ட சண்முகம், கடந்த 2011 முதல் 2016 வரை, சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவர் பதவி வகித்தார்.மேலும், இவர், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களும் செய்து வந்துள்ளார். அவர் வசிக்கும் பகுதியிலேயே அதிமுக நிர்வாகி சண்முகத்தை, மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர். உறவினர்கள் மற்றும் அதிமுகவினர் நீண்ட நேரம் சடலத்தை எடுக்க விடாமல் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின், போலீசார், கொலை செய்யப்பட்ட உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இக்கொலை குறித்து, அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இவர், அதிமுக பொதுச் செயலாளர் இ.பி.எஸ்.,க்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.