| ADDED : ஜூலை 19, 2024 01:46 AM
ஓமலுார்:சிறுத்தை தாக்கி உயிரிழந்த பசுமாட்டுக்கு, இழப்பீடு வழங்குவதில் வனத்துறையினர் தாமதம் செய்வதாக பாதிக்கப்பட்ட விவசாயி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.சேலம் மாவட்டம், டேனிஷ்பேட்டை வனச்சரகத்துக்குட்பட்ட, எலத்துார் காப்புக்காடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. ஜூன், 3ல், காருவள்ளி கிராமத்துக்குட்பட்ட கோம்பைக்காடு பகுதியில் சீனிவாசன், 65, என்பவரின் பசுமாட்டை, சிறுத்தை வேட்டையாடி கொன்றது. அவ்விடத்தையும், பசுமாட்டையும் வனத்துறை அதிகாரிகள் பார்வையிட்ட பின், இழப்பீடு வழங்கப்படும் என கூறினர்.சிறுத்தையால் கொல்லப்பட்டு, ஒன்றரை மாதத்துக்கு மேலாகியும், வனத்துறையினர் பசு மாட்டுக்கு இழப்பீடு வழங்கவில்லை. நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட விவசாயி சீனிவாசன் கூறுகையில், ''டேனிஷ்பேட்டை வனத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து, இழப்பீடு வழங்கக் கோரி கடிதம் வழங்கினேன். ஆனால் இதுவரை வழங்கவில்லை. அதிகாரிகளிடம் கேட்டபோது முறையான பதில் தரவில்லை,'' என்றார்.